Pages

Monday, September 2, 2013

சோறு ஆரோக்கியமான உணவு.

                                 

               
                               ஒரு இரு நாள் சோறு உண்ணவில்லையென்றால், ஒரு வருடம் உணவுல்லாத ஒரு உணர்வு ஆசியநாட்டவர்களிடையே இருக்கின்றது. அவர்கள்  அத்தியாவசியமான முதல் உணவு அரிசிச்சோறாகும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இங்கிலாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, மொறக்கோ, துருக்கி, ஆபிரிக்கா, போலந்து, இவ்வாறு பலதரப்பட்ட நாட்டுமக்களுடன் ஒன்றாக வாழ்ந்து அவர்களுடன் பழகும்போது அவர்களுடைய தேசியஉணவுகளையும் சுவை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அவ்வாறு சுவை பார்க்கின்ற வேளையிலும் தமது தேசியஉணவை அவர்கள் மறப்பதில்லை.
        
                                      அதுபோல் இங்கு வளருகின்ற இளந்தலைமுறையினர் எவ்வாறான உணவுகளை விரும்பினாலும், எமது தேசியஉணவை கூடுதலாக விரும்புகின்றனர். ஒவ்வொருநாளும் விரும்பி உண்ணவில்லையானாலும், எமது உணவில் பிடிப்பு அவர்களுக்கு உண்டு. ஆனால், தற்போது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலேயே சோறை வெறுத்து பிட்ஷா, ஹம்பேகர் போன்ற உணவுகளுக்கு இளந்தலைமுறை அடிபணிந்து வாழ்வது அறியக்கூடியதாக இருக்கின்றது. போசாக்கின்றி உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற இவ்வுணவுகளை உண்பதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை இவர்கள் நினைத்துப் பார்பதில்லை. இவ்வுணவுவகைகள் Fastfood என்ற பெயரில் Fast  ஆக எமது உடலைப் பாதிக்கும்  என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
               
                                          அளவுக்கதிகமாக சோற்றை உண்பதுடன் சாப்பிட்டவுடன் ஒரே இடத்தில் அசையாது இருந்து தொலைக்காட்சிகளைப் பார்ப்பது, உண்டவுடன் நீண்ட நேரம் நித்திரை செய்வது போன்ற காரணங்களாலேயே இதிலுள்ள மாப்பொருள் உடற்பருமனை ஏற்படுத்துகின்றது
               
              அரிசிச்சோறு ஒரு மாப்பொருள் உணவு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்வரிசிச்சோறானது சுகாதார மேம்பாட்டுப் பண்புகளைக் கொண்டது. இதில் ஆரோக்கிமற்ற கொழுப்பு காணப்படாது. இதில் புரதம், விற்றமின், கனிப்பொருள்கள் காணப்படுகின்றன. இதில் விற்றமின்கள் B1.B6 போன்றவை இருக்கின்றன. பி1 நரம்புகளுக்கும், வளர் தசை  மாற்றத்திற்கு பி6 தோலுக்கும், இரத்தம் உடலில் உற்பத்தியாவதற்கும் உதவுகிறது.
                
                             பியோட்டின் பொட்டாசியம், துத்தநாகம் போன்றவையும் இதில் காணப்படுக்கின்றன. பியோட்டின் தலைமயிருக்கும் நகத்திற்கும், பொட்டாசியம் இரத்தஅழுத்தத்தை சீராக்குவதற்கும், துத்தநாகம் குளிரான சமயத்தில் உடல் வெப்பநிலையைப் பாதுகாப்பதற்கும், நோய்எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றது. இதில் காபோவைதரேற்று அதிகம் உண்டு.
         
                               அதிகநேரம் பசியைத் தாக்குப்பிடிக்கும் சக்தி சோற்றுக்கு உண்டு. இது இலகுவில் சமிபாடடையும் தன்மையுள்ளதால் வயிறு குடல் சம்பந்தமான நோயுள்ளவர்களுக்கும் சோறு சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது. அரிசிச் சோறு தேவையில்லாத உடலுக்குள் இருக்கும் நீரை வெளியகற்றும்  சக்தி கொண்டது. அதனால், உடலினுள் உள்ள நஞ்சுப் பொருள்கள் சிறுநீராக சிறுநீர்ப்பை ஊடாக வெளியகற்றும்.
இவ்வாறான சிறப்புகள் கொண்ட எமது தேசிய உணவை அளவோடு உண்டு நலமாக வாழ்வோம்.