Pages

Saturday, May 21, 2011

கால்விரல்கள், பாதங்களைப் பாதுகாத்தல்


                                


உச்சியில் இருந்த உள்ளங்கால்வரை அழகாய் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருத்தரும் நினைப்பார்கள். ஆனால் சிலர் முகத்துக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் கால்களுக்குக் கொடுப்பதில்லை. விதம்விதமான அலங்காரங்களை முகத்திற்குச் செய்து கால்களை சட்டை செய்யாமல் விட்டுவிடுவார்கள். குதிகால்கள் வெடித்து வறண்டு (பித்தவெடிப்பு) Hornhaut காணப்படும். கால்விரல்நகங்கள் ஒழுங்கில்லாமல் வெட்டப்பட்டு சோபை இழந்திருக்கும். 40 தாண்டிவிட்டால் இது எதையுமே கவனிக்காத எத்தனையோ பெற்றோர்கள் எம்மத்தியில் இருக்கின்றார்கள். அழகான புடவை கட்டியிருந்தாலும் கால்ப்பகுதிப் புடவை உயர்ந்துவிட்டால், கால்களைப் பார்க்கமுடியாது. கால்கள் இரண்டும் எமது இரண்டு வைத்தியர்கள் போலே அமைந்திருக்கின்றன. எம்மைத் தாங்கிநிற்பது மட்டுமன்றி உடல் ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டுவனவாகவும் காணப்படுகின்றன. இதைவிட ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற பெண்கள் உசாராகிவிட்டார்கள். திருமணத்திற்கு ஆண்களைத் தேடும்போது அவர்கள் கால், கை அழகாக இருக்கவேண்டும் என்று பெற்றோரிடம் பணித்துரைக்கின்றார்கள். நானறிந்த ஒரு பெண் ''எமது ஆண்களின் கைகால்கள் வரட்சியாகக் காணப்படுகின்றது. அதைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கின்றது'' என்று கூறியதைக் கேட்டிருக்கின்றேன். எனவே கால்களைப் பராமரித்தல் பெண்களுக்கும் மட்டுமல்ல, ஆண்களுக்கும் அவசியமாகப்படுகின்றது. 

முதலில் பாதங்களில் பூசியிருக்கும் நகப்பூச்சை Nail Polish Remover கொண்டு அகற்ற வேண்டும். அதன்பின் Sodabicarbonate (Natron) ஐக் கிள்ளி எடுத்து வெதுவெதுப்பான நீரினுள் இட்டு சில துளிகள் Hydrogen peroxide (Wasserstoffperoxid)
 ஐயும் சேர்க்க வேண்டும். இந்த நீரினுள் நிகப்பூச்சு அகற்றப்பட்ட பாதங்களை வைக்கவேண்டும். சிறிதுநிமிடங்களின் பின் நகங்களைத் தேய்த்துத் துப்பரவு செய்யவேண்டும். குதிகாலை தேய்க்கின்ற கல் அல்லது கடையில் விற்கும் தேய்ப்பதற்குப் பயன்படும் உபகரணத்தைப் பயன்படுத்தி உராய்ந்து தேய்ந்து இறந்த தோல்களை அகற்ற வேண்டும். உலர்ந்த துணியினால் கால்களைத் துடைத்தபின் விரல் நகங்களில் இருக்கின்ற இறந்த தோல்களை தள்ளி அகற்றவேண்டும். பின் நகங்களை அழகான வடிவத்தில் வெட்டி, நகங்களுக்குச் சத்தைக் கொடுக்கின்ற கிரீம் பூசலாம். 


பாதங்களுக்கான பயிற்சி:

1. நேராக நின்று இரண்டு பாதங்களின் குதிகால்களையும் ஒன்றாக இணைத்து பாதவிரல்களை 45பாகை உயரத்திற்குத் தூக்குதல் வேண்டும். முழங்கால்களை வளைக்கக் கூடாது. இந்நிலையில் இரண்டு கைகளையும் நேராக உயர்த்திப் பிடித்துப் பின் முன்புறமாக உங்கள் கைகளைக் கொண்டு வாருங்கள். பின் பழைய நிலைக்கு வருதல் வேண்டும். 5 தடவைகள் இப்படிச் செய்யலாம்.
2. உயரமான இடத்தில் இருந்து கொண்டு உங்கள் கால்களைத் தூக்குங்கள். இப்போது முழங்கால்கள் நேராக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது ஒவ்வொரு பாதங்களையும் மணிக்கூட்டுக் கம்பிகளின் சுற்றும் போக்கில் சுற்றவேண்டும் பின் அடுத்த பக்கம் சுற்றவேண்டும். 


3. கதிரையில் இருங்கள். இரண்டு பாதங்களும் நிலத்தில் சரிசமனாகப் படவேண்டும். இப்போது உள்நோக்கியும் வெளிநோக்கியும் பாதங்களைத் திருப்புங்கள். 10 தடவைகள் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

4. கால்களுக்கு மசாஜ் கொடுக்கவேண்டும். மசாஜ் செய்யும் போது மிகுதியாக அழுத்தக்கூடாது. ஏனெனில் அழுத்துகின்றபோது அழுத்துகின்ற இடங்களில் அடையாளம் தோன்றும். விரைவாகச் செய்யவும் கூடாது. கணுக்காலில் ஆரம்பித்து கெண்டைக்கால் முழங்கால் வரைத் தொடரலாம். விரல்கள் முழுவதும் மசாஜ் செய்யப்படவேண்டும். கைவிரல் நுனிகளில் எண்ணெய்யை எடுத்து தட்டுதல், கிள்ளுதல், உருவுதல், போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம்.



கால்களுக்குப் பொருத்தமான பாதணிகளை அணிதல் வேண்டும். இல்லையெனில், பாதங்களில் அடையாளம் தோன்றுவதுடன் கால்களில் காய் போன்று தோன்றும் Corns (Hüneraugen)  நோய் ஏற்படும். இப்போது மீன்கள் உள்ள நீரினுள் கால்களை வைத்து நோயுள்ள தோல்களை மீன்களை உண்ணப் பண்ணுகின்ற ஒருமுறையைக் கையாளுகின்றார்கள். 

இதன்படி நடந்து கொண்டு அழகான பாதமுள்ள ஆண்மகனாகவும் பெண்ணாகவும் வாழ வாழ்த்துகள்