Pages

Wednesday, May 30, 2012

நீண்டகாலம் வாழ




உள்ளமும் உடலும் ஒருங்கே மகிழ்ந்திருந்தால், மனிதன் வாழ்வில் நோய்நொடி தவிர்ப்பான் என்பது நிஜமே. உடல் உள பாதிப்புக்குள்ளானவர்கள் தமது வாழ்வைத் தாமே முடித்துக் கொள்ளுகின்றனர். இல்லையேல், தாமாகவே நோயைத் தேடிக்கொள்ளுகின்றனர். சூழல், சுற்றாடல், உறவுகள், அபிலாசைகள், ஏக்கங்கள், துயரங்கள், ஓய்வின்றிய உழைப்பு போன்றவை ஒரு மனிதனின் உளநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த உளப்பாதிப்பினையே பிரமகத்தி தோஷம் என்பார்கள். இராமயுத்தத்தின் போது இராமனுக்கு இத்தோஷமே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உளநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உம்மென்றிருத்தல், கோபித்தல், ஆர்ப்பாட்டஞ்செய்தல், சண்டையிடுதல் வாய்மடித்தல், பற்களைக்கடித்தல். எழும்பி ஓடுதல், அழுதல், சிரித்தல் போன்ற குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். 

உளப்பாதிப்புள்ளானவர்களுக்கு புற்றுநோய், இரத்தஅழுத்தம், நீரழிவு போன்ற நோய்கள் இலகுவில் தாக்குவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். உடலையும் உள்ளத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய மனிதனின் கடமையாகின்றது. யோகப்பயிற்சியின் மூலம் உடல் உளப் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யலாம். பிரணாயாமம் செய்வதன் மூலம் உள்ளத்தை அமைதிப்படுத்தமுடியும். இது ஒரு சுவாசப்பயிற்சியாக அமைகின்றது. ஒரு அமைதியான இடத்தைத் தெரிவுசெய்து கொண்டு இரண்டு நாசித்துவாரங்கள் வாயிலாகவும் மூச்சுக்காற்றை உள்ளெடுத்து இரண்டு நாசித்துவாரங்கள் வாயிலாகவும் வெளியிடவும். பின் வலது நாசியினால் உள்ளெடுத்து வலது நாசியினாலேயே வெளியிடவும். பின் இடது நாசியினால் உள்ளெடுத்து இடது நாசியினாலேயே வெளியிடவும். பின் வலது நாசியினால் உள்ளெடுத்து இடது நாசியினால் வெளியிடவும். பின் இடது நாசியினால் உள்ளெடுத்து வலது நாசியினால் வெளியிடவும். ஒவ்வொன்றையும் ஆரம்பத்தில் 5 தடவைகள் செய்து பயிற்சி செய்துவிட்டு பின் மெல்ல மெல்ல அளவுகளைக் கூட்டலாம். பிரணாயாமம் செய்கின்ற போது முள்ளந்தண்டு நேராக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இவ்வாறு மூச்சுப்பயிற்சியின் மூலம் எமது நுரையீரல் மூளை சம்பந்தமான நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். 

ஆயுள் அதிகரிக்க:

திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்தவர் என்று சொல்லப்படுகின்றது. இவர் ஆயுள் பற்றியக் கூறுகின்றபோது     

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே

ஆமையானது மனிதன் போலவே 3 மடங்கு ஆயுளுடையது. இது நிமிடத்திற்கு 3 முறை மட்டுமே சுவாசிக்கக் கூடியது. மனிதன்  ஒரு நிமிடத்திற்கு 15 தடவைகள் சுவாசிக்கின்றான். அப்படியானால் ஒரு மணித்தியாலத்திற்கு 900 தடவைகளாகின்றன. ஒரு நாளுக்கு 21,600 முறைகள் ஆகின்றன. இச்சுவாசத்தை எந்தளவிற்குக் கட்டுப்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு எமது ஆயுளும் அதிகரிக்கின்றது. ஒரு மனிதன் 15 முறைகள் சுவாசித்தால் 100 ஆண்டுகள் வாழலாம். 2 முறைகள் சுவாசித்தால் 750 ஆண்டுகள் வாழலாம். 1 முறை சுவாசித்தால் 1500 ஆண்டுகள் வாழலாம். எனவே ஆயுளை அதிகரிக்கச் செய்து நீண்டகாலங்கள் வாழ்ந்து உலக மாற்றங்களை புதிய கண்டுபிடிப்புக்களை அநுபவித்து வாழ்வதற்கு முனைந்து நிற்போம். ஆனால், இது எப்படி சாத்தியப்படும் என்று எல்லோரும் மூக்கில் விரல் வைப்பது எனக்குப் புரிகின்றது. வாழ்ந்த மனிதர்களைக் காட்டமுடியுமா? என்ற கேள்வி கேட்பதும் என் காதுகளை எட்டுகின்றது. ரிசிகள் பல ஆண்டுகள் வாழ்ந்ததாக ஏடுகள் உரைக்கின்றன. மூச்சைக்கட்டுப்படுத்தி விட்டால் மட்டும் போதுமா? எமது மற்றைய பழக்கவழக்கங்களில்; கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமல்லவா! மூச்சுமுட்ட உணவை உண்டு கொண்டு 100 ஆண்டுகள் வாழமுடியுமா? உணவுப்பழக்கத்திலும் கட்டுப்பாடுகள் வேண்டும். எம்மைச் சுற்றி இரசாயணங்கள் கலந்திருக்கின்றன. தொழில்நுட்பம் நிறைந்த உலகில் இயந்திரமயமாக்கப்பட்ட மனிதன் தன் உடல் உளம் பற்றிச் சிந்திப்பதே இல்லை.சிலர் மற்றையவர்கள் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. அவர்கள் அருகே இருந்து ஊதித்தள்ளும் சிகரெட்டுப்புகையானது அருகே எவ்வளவு மூச்சுப்பயிற்சி செய்து கவனம் மேற்கொள்ளும் மனிதனினுள் சென்று அவன் கவனத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும். 


முற்றுமுழுதாக எம்மால் சிலவற்றைக் கடைப்பிடிக்க முடியாமல் போனாலும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் சிறிதளவாவது எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்க்கையை ருசிப்போம்.